பங்காளிங்க..

Wednesday, April 24, 2019

அட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க!

ரு பள்ளியில் முக்கிய தேர்வு நடந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் தேர்வெழுதிக் கொண்டிருந்தனர். அந்த தேர்வு அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த தேர்வில் வெற்றி பெற்றால்தான் அவர்களின் அவர்களை சார்ந்தவர்களின் நம்பிக்கை துளிர்க்கும் என்ற நிலை. 

அதனால் அந்த மாணவ, மாணவிகளின் உடனிருப்போர் அந்த தேர்வில் எப்படியாவது தனது மகன் அல்லது மகள் எப்படியாவது வெற்றி  பெற்று விட வேண்டும் என்ற முனைப்பினில் ஒரு வருட காலம் பயிற்சி மேற்கொண்டு, அதற்காக தனி வகுப்புகளுக்கு செலவு செய்து படித்து முடித்து விட்டு தற்போது தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர்.

அதே தேர்வு மையத்தில் பணக்கார மற்றும் ஏழை மாணவ, மாணவிகளும் தேர்வெழுதி கொண்டிருந்தனர். பணக்கார வர்க்கத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பணம் கொடுத்து தனி வகுப்புகள் படித்து, தனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரிய ஆசிரியைகளை பணத்தால் விலை பேசி முக்கியமான கேள்விகளை எல்லாம் தெரிந்து கொண்டும் தேர்வெழுத வந்திருந்தனர்.

ஏழை மாணவ, மாணவிகள் பணம் செலவழிக்க வழியில்லாததால் இருக்கும் பணத்தில், குருவி சேகரித்த நெல்மணிகள் போல பணத்தை செலவழித்து தேர்வுக்கு வந்திருந்தனர். நமது விடைத்தாளை நல்ல ஆசிரியர், ஆசிரியைகள்  திருத்த வேண்டும், நம்முடைய முயற்சிக்கேற்ற பலன் கிடைத்தால் போதும் என்று இயங்கி கொண்டிருந்தனர்.

ஒரு சில மாணவ, மாணவிகள் முடிந்தவரை எழுதுவோம், நிச்சயம் தேர்வில் யாராவது ஒருவன் பிரச்சினை செய்வான், அவனை காட்டிக்கொடுத்து அதன்மூலம் அந்த தேர்வை ரத்து செய்து விட்டால் அடுத்த முறை பார்த்துக்கொள்வோம் என்று காத்துக்கொண்டிருந்தனர்.

இப்படி பலதரப்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வெழுதி கொண்டிருக்கும் அந்த தேர்வினை கண்காணிக்க சிறப்புக் குழு வந்தது. அந்த சமயத்தில் ஒரு மாணவன் பிட் அடித்து மாட்டிக்கொண்டான்.

எதுவுமே படிக்காமல் எந்த வித முயற்சியும் எடுக்காமல் தேர்வினை  எழுத வந்தவர்களுக்கு இந்த தகவல் தெரிந்து, ரகசியமாக கண்காணிப்பு அதிகாரிக்கு தகவல் கொடுத்து அந்த பிட் அடித்த மாணவனை கையும் களவுமாக பிடிக்க அதிகாரிகளுக்கு துப்பு கொடுத்தனர். காரணம், இந்த பிரச்சினையை காரணம் காட்டி தேர்வினை தவிர்த்து விடலாம், அதனை காரணம் காண்பித்து நாம் அந்த தேர்விழி  கொள்ளலாம் என்ற எண்ணம் அவர்களுக்குள் இருந்தது.

அதன்படி அவர்களின் கைப்பாவையாக கண்காணிப்பு அதிகாரியை வைத்துக்கொண்டு தேர்வினை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொண்டனர். அவர்களின் கனவு பலித்தது. கண்காணிப்பு அதிகாரி அறைக்குள் நுழைந்து தேர்வில் பிட் அடித்த மாணவனை கையும் களவுமாக பிடித்தனர்.

உடனடியாக யாருமே எதிர்பார்க்காத அந்த அறிவிப்பினை வெளியிட்டனர். இந்த தேர்வினில் இந்த மாணவன் பிட் அடித்த  காரணத்தால் உடனடியாக இந்த பள்ளியை இழுத்து மூடுங்கள் என்று சொன்னதும் ஒட்டுமொத்த பள்ளி மாணவ,மாணவிகளும் அதிர்ச்சியடைந்தனர். அய்யா, தவறு செய்தவரை ஒன்றும் சொல்லாமல் வெளியில் அனுப்பி விட்டீர்கள், நாங்கள் என்ன பாவம் செய்தோம் எங்களுக்கு என்ன தணடனை என்று கதறியழுதனர்.

வாங்கிய பணத்திற்கு வஞ்சகம்  இல்லாமல் பணியாற்ற  நினைத்த அதிகாரிகள் உடனடியாக ஆக்சன் எடுத்து ஒட்டு மொத்த பள்ளியையும் டிஸ்மிஸ் செய்தனர்.  உண்மையில் படித்து எந்தவிதமான டியூசனுக்கு செல்லாமல் தானாகவே கஷ்டப்பட்டு படித்து தன்னை சார்ந்தவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆர்வமாய் காத்திருந்த மாணவ, மாணவிகளுக்கு விழுந்தது முதல் அடி.

பிட் அடித்த மாணவனை பிட் அடித்தவன் என்று மட்டும் கூறி அவனை வெளியே அனுப்பி விட்டு, இனிமேல் அடுத்த தேர்வில் பிட் அடிக்காதே என்று சொல்லிவிட்டு சென்றனர் கண்காணிப்பு அதிகாரிகள்...தேர்வே வேண்டாம் என்று நினைத்த மாணவர்கள் ஏற்கனவே ரகசியமாக கொண்டு சென்ற கேமிராவில் அவன் பிட் அடித்ததையும் அதை கண்காணிப்பு அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து பின்னர் அவனை எச்சரித்து வெளியே அனுப்பியதையும், அதன் பின்னர் ஒட்டுமொத்த பள்ளியையும் டிஸ்மிஸ் செய்ய உத்திரவிட்டதையும் படம் பிடித்து உலகிற்கு வைரலாக பரப்பி விட்டனர். 

ஆனால் இந்த கூறுகெட்ட ஜனங்க, இதையும் வழக்கம் போல கண்டுக்காம, நமக்கென்னன்னு பேசாம இருக்காங்க! 

உடனே அந்த பள்ளி எங்கே இருக்குன்னு யோசிக்காதீங்க? 

அந்த பள்ளி தான் வேலூர் நாடாளுமன்ற தொகுதி...பிட் அடிச்ச மாணவன் திமுக துரைமுருகன் வீட்டுல நடந்த ரெய்டு, கஷ்டப்பட்டு தேர்வெழுதின இதர மாணவ, மாணவிகள் வேற யாருமில்லை நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அப்புறம் இதர சுயேச்சை கட்சிகள்தான், 

சரி இந்த சரியா படிக்காம தேர்வை எப்படியாவது நிறுத்தணும்னு நினைச்சாங்களே, அவங்க வேற யாருமில்ல, பிஜேபியும், அதிமுக வும்தான், காரணம் அதையும் மீறி அவங்க தேர்தல்ல நின்னுருந்தாலும் மண்ணைத் தான் கவ்வியிருப்பாங்க...

உலகத்திலேயே அதி புத்திசாலித்தனமா தீர்ப்பு கொடுத்தாங்க பாருங்க தேர்தல் ஆணையம், இனிமே ஒருத்தன் பொறந்துதான் வரணும், இப்படி ஒரு மகா தீர்ப்பு கொடுக்கிறதுக்கு! குற்றத்தை தடுத்திட்டாங்களாம்! 

ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கியிருக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, இந்தியர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டியதுதான் மிச்சம்! 

கடுமையான சட்டம், பணம் பெற்றால் ஓராண்டு தண்டனை, பணம் கொடுத்தால் 10 ஆண்டுகள் அடுத்த தேர்தலில் நிற்க முடியாது, 5 ஆண்டு சிறைத்தண்டனையாம்! வேட்பாளர்களை விட அதிபயங்கரமான வாக்குறுதிகளை வழங்கிய தேர்தல் ஆணையம் எதையுமே நிறைவேற்றவில்லையே! 

ஒருத்தன் கூட பணம், பரிசு பொருள் அல்லது டோக்கன் வாங்கலையா? அல்லது ஒருத்தன் கூட கொடுக்கலையா? வார்டு நம்பர் போட்டு பணப்பட்டுவாடா செய்ய விருந்த பணம் கைப்பற்றப்பட்டது தற்போது உலகம் முழுவதும் தெரியும், ஆனால் இந்த தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா? எத்தனை வாட்சப் வீடியோக்கள், எத்தனை ஊடகங்களின் பணப்பட்டுவாடா வீடியோக்கள்! என்ன லட்சணத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இருந்திருக்கும் என்பது இன்னுமா மக்களுக்கு புரியவில்லை! 

குமரி மாவட்டத்தில் ஐந்தாறு கிராமங்களில் ஒருவருக்கு கூட வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இல்லையாம், அப்புறம் வருஷம் முழுக்க என்ன கணக்கெடுப்பு எடுத்தாங்களாம்?  அப்புறம் என்ன ம******கு வாக்காளர் அடையாள அட்டை, இத்தனை தேர்தல் அதிகாரிகளுக்கு சம்பளம், அதுக்கு ஒரு துறை! வெட்கக்கேடான விஷயம்! ஒரு தேர்தலை உருப்படியா நடத்த துப்பில்லை! முதலில் தேர்தல் ஆணையத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வரணும், அப்போதான் நம்ம அதிகாரிகளோட வேலை லட்சணம் புரியும்! 

Friday, April 19, 2019

திருந்த வேண்டியது தேர்தல் ஆணையமே?

17 வது நாடாளுமன்றத் தேர்தல் அலப்பறைகள் முடிந்து முடிவுகளுக்காக ஒட்டுமொத்த இந்திய தேசமும் காத்திருக்கிறது....

நவீன இந்தியா, வல்லரசு இந்தியா, இன்னும் என்னென்னவோ பெருமைகள்? எந்தெந்த துறைகளில் நாம் சாதித்து விட்டோம்? ஒன்றுமே கிடையாது, வெறும் வசனங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமே தவிர வேறெதுவும் இல்லை....

இந்தியாவை பொறுத்தவரை எந்தெந்த துறைகள் எந்த கட்சியையும் அரசாங்கத்தையும் சாராதிருக்க வேண்டும் தெரியுமா?  நீதித்துறை, காவல்துறை, ராணுவத்துறை, ஊடகத்துறை மற்றும் தேர்தல் ஆணையம் இவையனைத்தும் என்று சுதந்திரமாக செயல்படுகிறதோ அன்றுதான் இந்தியா வல்லரசாகும்....

தற்போதைய அவசரத்தேவை என்பது அரசியல் விதிமுறைகள் மாற்றத்திற்கு வர வேண்டும்.

மற்ற துறைகளை அப்புறம் பார்ப்போம், தற்போது நாம் சிந்திக்க வேண்டியது தேர்தல் ஆணையம் மட்டுமே....எந்த அரசியல் சாராத நபர்கள் மட்டுமே தேர்தல் அதிகாரிகளாக வர வேண்டும்...அப்போதுதான் சரியான நியாயம் அனைவருக்கும் சமதர்மமாக கிடைக்கும்...

தேர்தல் விதிமுறைகளை இப்படி கையாண்டால் எல்லோருக்கும் பயம் வரும்!

1) ஒவ்வொரு கட்சிக்கும் தனித் தனி கொள்கைகள் இருக்க வேண்டும்,

2) தேர்தல் பரப்புரையில் வழங்கும் வாக்குறுதியானது ஓராண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். குறைந்தது அவர்கள் கூறும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்க வேண்டும்.

3) ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதவிக்காலம் என்பது 5 ஆண்டுகள் மட்டுமே. அதன் பிறகு அதே வேட்பாளர் பதவிக்கு வரவோ, போட்டியிடவோ கூடாது.

4) ஓராண்டுக்குள் கூறும் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் இரண்டாமிடத்தில் வெற்றி பெற்ற நபர் அதே பதவிக்கு பணியமர்த்தப்படுவார்கள். அப்போது சுழற்சி முறையில் புது புது அரசியல் பணியாளர்கள் வருவார்கள்.

5) பிரதமர் வேட்பாளரின் பணிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. தொடர்ச்சியாக ஒரே பிரதமர் இரண்டாவது முறை வரக்கூடாது.

6) பிரதமரையும் மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும். வட இந்தியாவிற்கு ஒரு பிரதமர், தென்னிந்தியாவிற்கு ஒரு பிரதமர் என்று அமைக்கப்பட வேண்டும்.

7) இரண்டு பிரதமர்களை நிர்வாகிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும்.

8) நாடாளுமன்ற வேட்பாளர்கள் ஆண்டுக்கொருமுறை தேர்வு எழுத வேண்டும். (தேர்வு என்பது அவர்கள் ஜெயித்து வந்த தொகுதியில் இருந்து கேட்கப்படும், தேர்வில் தோற்றுப்போகும் வேட்பாளர்கள் இடைநீக்கம் செய்யப்படுவர்,  இடத்திற்கு இரண்டாம் இடத்தில் இருக்கும் வேட்பாளர் பணியமர்த்தப்படுவார் )

9) தேர்தலில் கையூட்டு கொடுக்கும் வேட்பாளரை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் அடுத்த முறை அவர்கள் தேர்தலில் நிற்கும் தகுதி இழப்பார்கள். அந்த தேர்தலில் நிற்கவே முடியாது, அதோடு 5 ஆண்டு சிறைத்தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

10) முறைகேடாக தேர்தலுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளரை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

11) வாக்கு பதிவு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு ரிசல்ட் அன்று மாலையே தெரிவிக்கப்பட வேண்டும். (தனித்தனியாக நடத்தினால் வேட்பாளர்கள் ஒவ்வொரு  மாவட்டமாக பிரச்சாரம் செய்யவோ, போக்குவரத்திற்கு இடையூறாகவோ இருக்க, நிற்க வேண்டியதில்லை.)

12) அனைவருக்கும் பிரச்சார மேடை பொதுவானதாக இருக்க வேண்டும்,. ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரிக்கிறேன் என்ற பெயரில் பணம் கொடுப்பது, போக்குவரத்திற்கு, பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.

13) வாரிசு அரசியல் கண்டிப்பாக இருக்க கூடாது,

14) தேர்வு மற்றும் திருவிழாக்காலங்களில் தேர்தல் நடத்த கூடாது.

15) எல்லாருமே எங்கே வேண்டுமானாலும் அனைத்து மாவட்டங்களிலும் வாக்கு பதிவு செய்யலாம் என்ற சட்டம் வந்தால், நிச்சயம் ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டாம் என்ற நியதி உருவாக வேண்டும்.

இப்படியெல்லாம் செய்தால் மட்டுமே தேர்தல் நேர்மையானதாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..எப்போது தேர்தல் ஆணையம் மேற்கூறியவாறு செயல்படுகின்றதோ அப்போதே நாட்டில் நல்லாட்சி மலரும்.

எப்போது தேர்தல் ஆணையம் திருந்துமோ?
அடுத்த பதிவில் 17வது நாடாளுமன்றத் தேர்தல் நாடகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடிப்பு: