பங்காளிங்க..

Tuesday, October 24, 2017

சிறந்த மாநகராட்சியாக திருநெல்வேலி???உண்மையா?

23.10.2017 திங்கள்கிழமை, வழக்கம் போல விடிந்தது, திங்கள்கிழமை பரபரப்பு மக்களிடையே ஒட்டிக்கொள்ள, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் பரபரப்போடு இயங்கி வருகின்றது. சிறு சிறு குழுக்களாக, தங்களின் ஏக்கங்கள், கனவுகள், லட்சியங்களை நெஞ்சில் சுமந்து கொண்டும், பலத்த எதிர்பார்ப்புகளோடும் கனத்த இதயங்களோடும் அலுவலக வளாகத்திற்குள் பொது மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக கூடத் தொடங்குகின்றார்கள். குறை தீர்க்கும் நாள் ஒவ்வொரு திங்கள்கிழமையும் நெல்லை மாவட்டத்தில் நடைபெறும், இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொள்வார். அந்த மனுக்கள் எல்லாம் முறையாக பரிசீலிக்கப்பட்டதா என்று ஆட்சியர் திரும்ப கவனத்தில் கொண்டு வருவாரா என்பது நேற்றைய சம்பவத்தில் இருந்து கேள்விக்குறிதான். மனுக்கள் பெறப்படுகின்றன. ஒரு சில மனுக்கள் விசாரிக்கப்படுகின்றன. அந்த ஒரு சில மனுக்களில் ஒரு சில மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. 

அதே வகையில் வழக்கமான பலத்த எதிர்பார்ப்புகளோடு நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து குடும்பத்தோடு வந்து ஏமாற்றத்தோடு கூடியிருந்த மக்களை ரத்த கண்ணீரை தந்து விட்டு சென்றார். இசக்கிமுத்து (28). இவரது மனைவி (25), மகள்கள் மதி (5) அட்சயா (1). இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளித்தனர். கந்துவட்டிக் கொடுமையால் நால்வரும் தீக்குளித்ததாக அவரது சகோதரர் கோபி தெரிவித்தார்.

70% மேலான தீக்காயங்களுடன் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி காருண்யா, அட்சயா பரணிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர். இசக்கிமுத்து மட்டும் உயிருக்குப் போராடி வருகிறார்.

முன்னதாக, தீக்குளிப்பு சம்பவம் குறித்து இசக்கிமுத்துவின் சகோதரர் கோபி கூறும்போது, "என்னுடைய அண்ணன் இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி காசிதர்மத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.1.45 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதை தங்கம்மா என்பவரிடம் கொடுத்திருந்தார். 8 மாதங்களுக்கு முன் வாங்கிய இந்தக் கடன் தொகைக்காக தங்கம்மா ரூ.2,34,000 வட்டி செலுத்தியிருக்கிறார். இந்நிலையில் அசல் தொகை ரூ.1.45 லட்சத்தை தருமாறு முத்துலட்சுமி என் அண்ணிக்கு நெருக்கடி கொடுத்தார். மிரட்டல் விடுத்துவந்தார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் முகாமின்போது 6 முறை மனு கொடுத்தோம். மனுவை எஸ்.பி., அலுவலகத்துக்கு அவர்கள் மாற்றிவிட்டனர். எஸ்.பி. அலுவலகத்திலிருந்து அச்சன்புதூர் காவல்நிலையத்துக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. ஆனால், அச்சன்புதூர் காவல்துறையினர் முத்துலட்சுமி தரப்புக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, மிகுந்த மன உளைச்சலோடு மீண்டும் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தோம். நான் கழிவறை சென்று திரும்புவதற்குள் என்னுடைய சகோதரர் குடும்பத்தினர் இந்தக் கோர முடிவை எடுத்துள்ளனர். என் சகோதரர் குடும்பத்தினர் உயிரிழந்தால் அதற்கு மாவட்ட ஆட்சியரேப் பொறுப்பேற்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.  இந்நிலையில், தீக்குளித்த 4 பேரில் 3 பேர் பலியாகினர்.

இது மிகத் துயரமான, கோரச் சம்பவம், இது சம்பந்தமாக பலரிடம் பல விஷயங்களை கேட்டறிந்தோம். கந்து வட்டிக்காரனுக்கு காசு எங்கே இருந்து வரும், பணத்தை வாங்குறப்ப பம்மியிருப்பான், பணத்தை வாங்கிட்டு கடனையோ, வட்டியையோ கேட்டால் கந்து வட்டி கொடுமை அது இதுவென்று எகத்தாளம் வேறு என்று கூறினார்கள். அப்படி கடன் வாங்கிட்டு கொடுக்காமல் ஏமாற்றி விட்டான் என்று எத்தனை வழக்குகள் இருக்கிறது என்று சொல்லட்டும் பார்க்கலாம்.  ஒரே ஒரு வழக்குதான் அதுவும் விஜய் மல்லையா மட்டும்தான், அந்த வழக்கும் நிலுவையில் இருக்கு, அதை பற்றி நாம பேச முடியாது? அவ்வளவுதானே? 

எங்கள் சிறுவயதுகளில் நாங்கள் கண்ட காட்சிகள் இன்னும் எனது மனதிற்குள் ரணமாய் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. நான்காயிரம் ரூபாய் கடன் வாங்கினார் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் அப்பா. அந்த நான்காயிரம் ரூபாய்க்கு ஸ்பீட் வட்டி என்று சொன்னார்கள். நண்பரின் அப்பாவோ ஐஸ் வியாபாரி. ஐஸ் வியாபாரம் இல்லை, போராடிப்பார்த்தார், வட்டி மட்டும் ஏறிக்கொண்டே இருக்கிறது, அசல் அடைக்க முடியவில்லை என்றும் கடைசியில் ஐஸ் வியாபாரியின் மனைவி வட்டிக்காரனுக்கு ஆசை நாயகியாக வேண்டும் என்பது அவனது உத்திரவு. இதுவும் நடந்த வரலாறு உண்டு. இப்போது அவர்கள் அந்த ஊரை விட்டே வெளியேறி விட்டார்கள். மான ரோஷத்திற்கு பயந்து நிறைய பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் நாம் நாளிதழ்களில் படித்திருப்போம். 

இது வழக்கம் போல ஒன்றுதான் என்று சொன்னாலும், 23.10.2017 அன்று அந்த பிஞ்சின் கைகளில் தின்பண்டத்தோடு எரிந்து நிற்பது என்பது பார்ப்பவர்களை உலுக்கும் செயல் என்று நினைக்கின்றேன். அன்புச்சுவற்றை உருவாக்கிய ஆட்சித்தலைவருக்கு முதல் அடி, அவர் வாங்கும் மனுக்களை அசாதாரணமாக தூக்கியெறிந்த காவல்துறையினரை என்ன வென்று சொல்வது? 

காவல்துறையில் எத்தனையோ நேர்மையான அதிகாரிகள் இருக்க, இந்த மாதிரியான போலிகளால் காவல்துறையின் கண்ணியம் கலைந்து தான் போகின்றது. என்ன செய்வது? 

இப்போது விசயத்துக்கு வருவோம், இந்த துயரச் சம்பவம் அனைத்து மக்களுக்கும் காணொளியிலும், புகைப்படங்களில் அனைவருக்கும் சென்று சேர்ந்து விட்டது. நெல்லையில் கடந்த இரண்டு வருடங்களாக செயல்படுத்திய திட்டங்களுக்காக சிறந்த மாநகராட்சி விருது வாங்கி இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தோம்.  ஆனால் இந்த  சம்பவத்தில் ஐந்து விஷயங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படுத்தப்படவில்லை, அச்சன்புதூர் காவல்நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை செய்ய வேண்டிய காவல்துறை அதிகாரிகள் எங்கே சென்றார்கள்? 

காவல்துறை சோதனை மிஸ்ஸிங்?????

1. ஒரு குடும்பம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலத்திற்குள்ளே எரிபொருளோடு நுழைந்ததை சோதனை போட ஆளில்லையே, அனைவருமே காணொளிகளை பாருங்கள், தீக்குளிக்கும் வரை எந்த காவல்துறை அதிகாரிகளையும் காணவில்லையே,  

தீ விபத்து தடுப்பு உபகரணங்கள் மிஸ்ஸிங்.??????

2. தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்க கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் எங்கே? பொதுமக்கள் தண்ணீரையும், மணலையும் தூக்கி எறிந்து தீயை அணைக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். பல ஆயிரம் மக்கள் கூடுமிடங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏன் பொருத்தி வைக்கப்படவில்லை? ஒரு சிறிய கண்காட்சி நடத்த வேண்டுமென்றாலும் ஒரு தீயணைக்கும் வண்டியை நிறுத்தவும், அதற்கு கட்டணம் வசூலிக்கவும் கவனம் செலுத்தும் அரசு,  ஏன் பொது மக்கள் கூடும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கவில்லை? 

ஆம்புலன்ஸ் வாகனத்தை காணோம்????????

3.  எல்லாவற்றிலும் கொடுமையான விஷயம், ஆம்புலன்ஸ் வண்டி உள்ளே இல்லை,. அவசர ஊர்தி வாகனமும் இல்லாமல், கடைசியில் காவல்துறை வாகனத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையாக இருந்தவர் ஒரு மருத்துவரும் அருகில் துணைக்கு இல்லாமல் இவங்களை நம்பினால் அவ்வளவுதான் என்பது போல முடிவெடுத்து அவராகவே எழுந்து நடந்து சென்று வாகனத்தில் ஏறிய காட்சி காணக் கண்கோடி வேண்டுமம்மா? 

அவசர சிகிச்சை மையத்தையும் காணோம்?????

4.  மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் என்பது பல துறைகளை உள்ளடக்கியது, அங்கே நிரந்தரமாக ஏன் ஒரு மருத்துவத் துறை செயல்பட வில்லை? முதலுதவி செய்யக்கூட ஆள் கிடையாது, பிஞ்சு குழந்தை மண்ணில் குப்புற விழுந்து கிடக்கின்றது? ஆனால் முதலுதவி செய்வதற்கு எந்த ஆட்களும் இல்லை,


ஒத்திகை மட்டும் போதுமா????


5. யாருமே இல்லாத இடத்தினில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது என்று ஒத்திகை செய்து காண்பிக்கவும், புகைப்பட கண்காட்சி நடத்துவதற்கா இந்த தீயணைக்கும் படை இருக்கிறது? 

23.10.2017 நெல்லையின் கருப்பு தினம்? இன்னும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கந்து வட்டி தொடர்பான வழக்குகள், விசாரணைகள் எல்லாம் தடபுடலாக இருக்கும்?  அதன் பிறகு அடுத்த சம்பவம்? 


சிறந்த மாநகராட்சி விருது திருநெல்வேலிக்கு கண்துடைப்பா? 

Thursday, October 5, 2017

அப்போல்லோவில்தான் அம்மா இருந்தாரா................??????

ஒரு மாபெரும் இயக்கத்தை வழிநடத்தி சென்றவர், இந்தியாவையே ஆளப்போகும் பதவிக்கும் தன்னை தயார்படுத்தியவர் இன்று தன்னுடைய மரணத்தை உலகிற்கே கேள்விக்குறியாக்கி விட்டு சென்றிருக்கின்றார், 

அம்மா இட்லி சாப்பிட்டார்கள், ஆப்பிள் பழம் சாப்பிட்டார்கள், இன்று நன்றாக பேசினார்கள், சிரித்தார்கள், என்று எத்தனை எத்தனையோ விபரங்கள் ஒவ்வொரு நாளும் அப்டேட் செய்யப்பட்டது, மாநிலத்தின் ஆளுநர் முதல் எதிர்க்கட்சி தலைவர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், இந்திய பிரதமர் என்று யாருமே பார்க்க முடியாத சூழல், ஒரு 50 அடி இடைவெளியில் சிறிய துவாரம் வழியாக கூட காண்பித்திருக்கலாமே! என்ன நடந்தது? 

அன்று சசிகலா சொன்னதைத்தான் நாங்கள் சொன்னோம், நாங்கள் யாருமே பார்க்கவில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் மன்னிப்பு கூறியிருக்கிறார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு ஆதரவு குரல் கொடுத்ததாக செய்தி வந்தது, தொண்டர்கள் அம்மா மீண்டும் வந்து விட்டார்கள், வந்து விடுவார்கள் என்று மகிழ்ச்சியோடு தேர்தல் பணியாற்றினார்கள், 

ஆனால் கடைசி வரை வரவே இல்லை, என்ன நடந்தது? உண்மையிலே அப்போல்லோ மருத்துவமனையில்தான் இருந்தார்களா? அப்படியெனில் நடந்தது என்ன? 
போயஸ் இல்லத்தில் இருந்து அப்போல்லோ மருத்துவமனைக்கு எடுத்து சென்றவர்கள் யார்?  அந்த ஊழியர்களும் பார்க்க வில்லையா? ஒருவருமே குரல் எழுப்பவில்லை, இதுவரை எந்த ஊடகமும் அதற்கு முன்மொழியவில்லை, கடைசி வரை யார் யார் பார்த்தார்கள், அவ்வளவு பெரிய அம்மாவை சசிகலா அம்மாவே தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் போட்டார்களா?  ஆம்புலன்சில் எடுத்து சென்றது யார்? ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்றது யார்? 

அதான் அந்த அம்மா போயிருச்சுல்ல, இப்போ இதை பற்றி பேசினா மட்டும் அந்த அம்மா வந்திருமா என்ன? என்று சில மேதாவிகள் கேள்வி எழுப்பிக்கொண்டு தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த அம்மா வராது, ஆனால் உண்மை வெளிவர வேண்டும்...

இயற்கை மரணமா? இந்த கேள்விகளை எல்லாம் நீதிமன்றமோ அல்லது எந்தவித பொதுநல வழக்கோ இதுவரை பதிவு செய்யப்படாதது ஏன்? நீதிமன்றத்திற்க்கே விருப்பம் இல்லையா? 

அம்மாவின் விசுவாசிகள் என்று வால்போஸ்டர் அடித்து ஒட்டியவர்கள், இப்போது காணாமலே போய் விட்டார்கள்...வேதா இல்லத்தில் வேலை பார்த்தவர்கள் எங்கே போனார்கள்? கொடநாடு காவலாளி கொலை செய்யப்பட வழக்கு என்னவானது? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைச்சர்களின் கோமாளித்தனமான பேச்சுக்கள்? 

அம்மாவின் மருத்துவ ரிப்போர்ட்டை இதுவரை அப்போல்லோ சமர்ப்பிக்காதது ஏன்? 
ஒரு நோயாளி அட்மிட் செய்யப்பட்டால் அவரது நோயின் தன்மை குறித்த முழு அறிக்கை வெளிவரவேண்டும், ஆனால் இதுவரை பைனல் ரிப்போர்ட் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதே! 

நீதியும், நியாயமும் செத்து போய் விட்டதோ, ஒரு முதலமைச்சருக்கே இந்த கதியெனில், சாமானியனின் நிலை என்னவாகும்? பதவி ஆசையில் மாறி மாறி பேசி வரும் அமைச்சர்கள், தினகரனை, சசிகலாவை ஆதரித்தவர்கள், இன்று எடப்பாடியையும், ஓபிஎஸ் சை ஆதரித்து பேச காரணம் என்ன? இது அத்தனையும் வாட்சப்பில் வலம் வந்து கொண்டுதானே இருக்கிறது? பொதுமக்களும் இதை பார்த்து கொண்டுதானே இருக்கிறார்கள்?

உலகம் முழுவதும் சுற்றும் மோடிக்கு இதை விட அவமானம் இருக்க முடியாது, நாட்டில் இருக்கும் அப்போல்லோ மருத்துவமனைக்குள் நுழைய முடியவில்லை, இதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் வந்து சென்றிருக்கிறார்கள், அப்படி என்ன தீராத வியாதி? 

அத்தனை நாட்கள் பலம் பெற்றிருந்த துக்ளக் ஆசிரியர் சோ அடுத்த நாளே மரணித்து போனார், தோழியின் மரணத்தை சகிக்க முடியாத சோ வும் மரணமடைந்தார் என்று சொல்லப்பட்டது. நட்பிற்கு அடையாளம் என்று புகழாரம் சூட்டினார்கள். என்னதான் நடந்தது? அப்போல்லோ ஆஸ்பத்திரியில் அம்மா இல்லை என்று அவர் உலகிற்கு சொல்லிவிடுவாரோ என்ற அச்சம் காரணமாக அவரும் முடித்து வைக்கப்பட்டாரா? 

இந்த சந்தேகங்களுக்கு முக்கிய காரணம், உள்ளே என்ன நடந்தது என்ற முழு விபரம் தெரியவில்லை, நாங்கள் அம்மாவை பார்க்கவே இல்லை என்ற அமைச்சர்களின் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களே இத்தனை கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மூல காரணம், உனக்கென்ன அதிகாரம் இருக்கிறது, இது அப்போல்லோவை அவமானப்படுத்தும் செயல் என்று அப்போல்லோ நிர்வாகிகள் கூறினால் மகிழ்ச்சி, அப்படியெனில் விளக்கம் கொடுங்கள், சிசிடிவி கேமிராக்களில் பதிவு செய்த காட்சிகளை மக்களுக்கு ஒளிபரப்புங்கள், செப்டம்பர் 5 முதல் டிசம்பர் 5 வரை நடந்த சம்பவங்களின், கொடுத்த மருத்துவத்தின் ரிப்போர்ட்களை மக்களுக்கு தெரிவியுங்கள் பார்க்கலாம், 

இத்தனை எதிர்க்கட்சிகள் கேள்விகள் கேட்ட பிறகும், மவுனம் சாதிப்பது எதற்கு? அம்மா மருத்துவமனையில் எடுத்து கொண்ட டிரீட்மென்ட்டை நாங்கள் வீடியோ எடுத்து வைத்திருக்கின்றோம் என்று தினகரன் இப்போது கூறக்காரணம் என்ன? இதை ஏன் ஆரம்பத்திலேயே வெளியிடவில்லை! இதை ஏன் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யவில்லை?

இது மக்கள் ஆட்சிதானே, மக்களிடம் ஒளிபரப்பு செய்து காட்டலாமே! தேர்தல் வரும்போது அதை போட்டுக்காட்டி அனுதாப ஓட்டுக்கள் பெற எடுக்கும் முயற்சியா இது? எதிர்வரும் தேர்தலில்  வாக்குவாதங்கள் இருக்கிறதோ இல்லையோ, தீவிர பிரச்சாரங்கள் இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் பண மழை கொட்டும் என்பதில் துளியும் ஐயமில்லை, 

அதிமுக 1, அதிமுக 2, அதிமுக 3, க்குள் இருக்கும் போட்டியில் திமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும், தேமுதிக கட்சியும் போட்டி போட உள்ளது, இதில் புது கட்சியாக  கமல்முக வும் புதிதாய் வருமென்றால் மக்களின் வாக்கு எங்கிருக்கும்?  

சின்னம்மா நாட்டுக்காக தியாகம் செய்து சிறைக்கு சென்றது நிச்சயம் ஒரு மிகப்பெரிய அனுதாப ஓட்டாக இருக்கும்! ஆக மொத்தம் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு சென்று திரும்பி அதையே தியாகி போல அடையாளம் காட்டி வாக்குகள் பெறுவது என்பது நாகரீகமாகி விட்டது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகள் இன்னமும் தள்ளிப்போய்க்கொண்டேதான் இருக்கிறது, 

திகார் செயிலோ, பார்ப்பன அக்ரஹாரா சிறையாகட்டும், தியாகிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதானே இருக்கிறது? மம்தா, மாயாவதி, அத்வானி, மன்மோகன்சிங், சோனியா காந்தி என்று மத்தியில் யாருமே குரல் எழுப்பவில்லை, இந்த மரணத்தை அவர்கள் விரும்பினார்களா? அல்லது ஏற்றுக்கொள்கிறார்களா? குறைந்தது, தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு கண்டனக்குரல் கூட எழுப்பவில்லையே! 

கலைஞருக்கு மட்டும் திராணியிருந்திருந்தால் இன்று தமிழ்நாட்டில் புரட்சி வெடித்திருக்கும், அதிமுக அணியும் சின்னாபின்னமாயிருக்கும் என்பது ஊடகவியலாளர்களின் கூற்று! உண்மைதானே, ஆனால் திமுகவும் தற்போது பலமிழந்து போயிருப்பது நிதர்சன உண்மை! அவ்வப்போது குரல் கொடுத்து நான் இங்கே இருக்கிறேன் என்பது போல அட்டெண்டன்ஸ் போட்டு கொண்டிருக்கும் திமுக! 

அப்போல்லோ முதல் ஐநா சபை வரை அனைத்துமே மர்மமாக இருக்கிறது.....