பங்காளிங்க..

Saturday, December 22, 2012

"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!!

பெண்ணிற்கு எதிராக நடக்கும் அநீதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.  யார் இதற்க்கு காரணம்? காம வெறி பிடித்து அலையும் ஒரு சில ஆணினமா? அல்லது நாங்களும் ஆணிற்கு சரிசமமாய் மாறிவிட்டோம் என்று தவறான கலாச்சாரத்தை தேர்ந்தெடுக்கும் ஒரு சில பெண்களினமா?
பாலியல் பலாத்காரம் என்பது கடந்த வாரம் டெல்லியில் மட்டும்தானா நடந்திருக்கின்றது? ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், மாவட்டத்திலும், கிராமத்திலும், நகரிலும், ஒவ்வொரு மணி நேரத்திலும், நிமிடத்திலும், நொடியிலும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 

அந்த செய்தி வெளியில் வந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே தமிழகத்தில் தூத்துக்குடியில் ஏழாம் வகுப்பு மாணவி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலையும் செய்யப் பட்டிருக்கின்றாள். இரண்டுமே பெண்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில்தான் நடந்தேறி இருக்கின்றது. இதற்க்கு தூக்குதான் சிறந்த தண்டனை என்று ஒரு சிலர் பிதற்றிக் கொண்டிருக்கின்றார்கள். முட்டாள்தனமான முடிவு இது என்றே நான் நம்புகின்றேன். 

அப்படி கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? நமது இந்திய சட்டத்தில்தான் ஓட்டைகள் விழுந்த வண்ணம் இருந்துகொண்டே இருக்கின்றது. ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தாலும், பல பெண்களை பலாத்காரம் செய்தாலும் தூக்கு என்பது உறுதியாகி விட்டது...செய்வதே செய்கின்றோம்...இரண்டு, மூன்று பெண்களை சூரையாடிவிடுவோமே என்று தான் அவன் சுற்றத் தொடங்குவான். பாலியல் குற்றம் எங்குதான் நடக்கவில்லை? நடக்கும் எல்லா இடத்திலும் வழக்கு இழுவைக்கு சென்று, கடைசியில் வாதி, பிரதிவாதி இரண்டு பேரும் இறந்த பின்னர்தான் தீர்ப்புகள் வழங்கப் படுகின்றன.

இந்த மாதிரியான பிரச்சினைகளில் குற்றவாளி சிக்கும் போது அவனுக்கென்று வாதாட யாருமே வரக் கூடாது. அவனது குடும்பத்தாருக்கு எந்த வித சலுகைகளும் அரசாங்கம் தரக்கூடாது. அப்படி செய்தால் ஓரளவிற்கு குற்றங்கள் குறையும். அவன்தானே தவறு செய்தான் அவனது குடும்பம் என்ன பாவம் செய்தது என்று யாரும் உதவ முன்வரக் கூடாது.  

அவன் வயதானவன் அல்லது பெண் அல்லது ஊனமுற்றவன் அல்லது அரசியல்வாதியின் மகன் என்ற வகையில் எந்த பாகுபாடுமின்றி தீர்ப்புகள் இருக்க வேண்டும். அப்படி நடக்குமா நமது இந்தியாவில்? எல்லாவற்றிற்கும் மேலாக அவன் தூக்குத் தண்டனை அறிவிக்கப்படும்போது குற்றவாளி கூண்டில் இருப்பவனை மன நோயாளி என்று அவனது வழக்கறிஞர் வாதாடி அவனை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுகின்றார். இதுவும் இந்தியாவில் மட்டும்தானே நடக்கின்றது.

தூத்துக்குடியில் ஒரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கின்றார். ஏழாம் வகுப்பு என்பது அந்த குழந்தைக்கு 12 வயதைத் தான் தொடுகின்றது. இன்னமும் அவள் டீன் ஏஜ் வயது பருவத்தையே தொட வில்லை என்பதையே இது காட்டுகின்றது. இதற்க்கு என்ன தீர்ப்பு கொடுக்கப் போகின்றார்கள்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்?

இனி ஒரு சம்பவம் எங்கும் நடக்காத வண்ணம் தண்டனை மிகக் கொடுமையானதாக இருக்க வேண்டும். என்ன காரணம்? மேலைக் கலாச்சாரத்தால் வந்த வினை என்று சொல்லிக்கொள்கின்றார்கள். இதில் பாதி உண்மைதான்? ஆனால் நாம் மேலைக் கலாச்சாரத்தில் பாதி வரை பின்தொடர்வதுதான் இந்த அவலங்களுக்கு காரணம்!  

அது என்ன பாதி? மேலைக் கலாச்சாரத்தில் ஆண் , பெண் இருவருமே மனம் ஒத்துப் போய் காமம் கொள்கின்றார்கள். ஆனால் இந்தியாவில் ஆண்கள் மட்டும் அவர்களைப் போல பெண்களை அனுபவிக்க ஆசைப் படுகின்றார்கள். ஆனால் குடும்ப கட்டுப் பாடு, சமுதாயப பார்வை போன்றவற்றால் பெண்கள் சற்று அடங்கி, ஒதுங்கி செல்கின்றார்கள். தனது ஆசைகளை, இச்சைகளை தீர்த்து கொள்ள வடிகால் தேடும் அந்த ஒரு சில காம வெறி பிடித்த ஆண்கள், எல்லாப் பெண்களையும் தவறான பார்வையில் பார்க்கின்றார்கள். அதன் விளைவு பெண்கள் சூறையாடப் படுகின்றார்கள். 

அப்படி ஆண்கள் வலை வீசும்போது அவர்கள் கைகளில் சிக்குவது கணவனை இழந்த பெண்கள், விவாகரத்து பெற்ற பெண்கள், ஆண் துணை இல்லாமல் வாழும் பெண்கள், அன்பிற்கு ஏங்கும் பெண்கள் போன்று வலை விரிகின்றது. முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த மாதிரியான ஆண்கள் திருமணம் ஆகாத பெண்களை விட திருமணம் செய்தும் கவலையில், சோகத்தில் இருக்கும் பெண்களையே தேடுகின்றார்கள். காரணம் அவர்களால்தான் பிரச்சினையை வெளியிலும் சொல்ல முடியாது. இப்படி மாட்டிக் கொண்டு தவிக்கும் பெண்கள் எத்தனை, எத்தனை பேரோ?? இன்னமும் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அடுத்தது ஒரு சில ஆண்கள் திருமணம் ஆன பிறகும் கூட தனது காம வேட்கையால், வெறியால் ஒன்றும் அறியாத அப்பாவி பெண்களை ஏமாற்றுகின்றார்கள். அவர்கள் தேர்ந்தெடுப்பது ஏழைப் பெண்கள் (ஒருவேளை சோற்றுக்காக வேலை தேடி அலைபவர்கள்), குடும்பப் பிரச்சினையால் வெளியூர்களில் வேலைக்கு வருபவர்கள்) என்று இவர்களது பட்டியல் நீளுகின்றது. எல்லாவற்றிலும் மோசமான விஷயம் தற்போது நடக்கின்றது? அது பள்ளி மாணவிகள், குழந்தைகள் தற்போது பாலியல் வன்புணர்ச்சிக் குட்படுத்தப் படுகின்றார்கள். என்ன காரணம்? அவர்களிடம்தான் எந்த விதமான எதிர்ப்பும் இருக்காது. ஒரு சாக்லேட், அல்லது ஒரு ஐஸ் கிரீமிர்க்கு அவர்களையும் அறியாமல் இழந்து விடுகின்றார்கள்.  

இதுவே ஒரு கல்லூரி பெண்ணாக இருந்தால் எங்கே சமுதாயத்தில் தம்மை அசிங்கப் படுத்தி விடுவாளோ என்ற அச்சத்தில் அவர்கள் இந்த பிஞ்சுகளை புனருகின்றார்கள். 

சட்டத்தில் இவர்களுக்கு அளிக்கப்படும் தீர்ப்புகள் இன்னமும் அவர்களுக்கு போதாது என்பதையே கடந்த கால சம்பவங்கள் காட்டுகின்றது. இதற்க்கு ஒரு வழி, அவர்கள் கழுத்தினில் அவர்கள் காமக் கொடூரர்கள் என்று அடையாள அட்டைப் பொருத்தப் பட்டிருக்க வேண்டும். அந்த குற்றவாளியின் குடும்ப புகைப்படம் அவனது கழுத்தினில் தொங்கவிடப் பட்டிருக்க வேண்டும். அப்படி செய்தால் நிச்சயம் குற்றங்கள் குறையும்.  இவன் செய்யும் பாவத்திற்கு இவனது அம்மா, அப்பா, மனைவி, சகோதரி, சகோதரன், மகன், மகள் புகைப்படம் வெளியில் தெரிய வரும்.

இந்த குற்றங்களுக்கு காம வெறி பிடித்த ஆண்கள் மட்டுமே காரணமில்லை, புகழ் விரும்பும், பெருமை தேடும் ஒரு சில பெற்றோர்களும் இதற்க்கு காரணம்!!! தனது மகளுக்கு எந்த வயதில் எப்படி ஆடை அணிவிக்க வேண்டும் என்று அவர்களும் கவனிப்பதில்லை. பெண் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில் கவன செலுத்தினாலே பாதி பிரச்சினைகள் முடிந்து விடும். எல்லாம் முடிந்த பிறகு அல்லது பெண் சீரழிந்த பிறகு குய்யோ, மெய்யோ என்று கத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. 

மேலைக் கலாச்சாரத்தை பின் தொடரும் ஆண்கள் ஆடைகளை அதிகமாக்கி கொண்டனர். இன்னமும் காமம், காதல் எது என்று வித்யாசம் தெரியாத இந்த இந்தியாவில் பெண்கள் மேலை நாட்டுக் கலாச்சாரத்தை அரை குறை ஆடைகளோடு வலம்  வருவதும் பிரச்சினைக்கு தூண்டுகோலாய் அமைகின்றது என்பதில் சந்தேகமேயில்லை. உனக்கு பணம் இருக்கின்றதா? உனது மகளுக்கு விலை உயர்ந்த ஆடைகளை, உடலை மறைக்கும் ஆடைகளை கொடுத்து அணியச் சொல்லுங்கள். ஏன் அதிக விலை கொடுத்து குட்டை பாவாடை போட்டு விடுகின்றீர்கள்? 150 ரூவாய் கொடுத்து சுடிதார் போட்டு விடுங்கள், 1500 ரூவாய் கொடுத்து ஏன் கர்சீப் வாங்கி கொடுத்து வெளியே அனுப்புகின்றீர்கள்?  

ஒரு சில ஆண்களின் பார்வை தவறாக இருக்கும் பட்சத்தில் ஏன் உங்கள் பெண்களை அரை குறை ஆடையோடு வெளியில் அனுப்பி பிரச்சனைகளை தூண்டி விடுகின்றீர்கள்?? 

பெண்களே உங்களுக்கும் இந்தியாவில் சம உரிமை இருக்கின்றது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம், எப்போது வேண்டுமானாலும் வெளியில் சுற்றி வரலாம்! தவறில்லை. ஆனால் நீங்கள் இருப்பது அரைகுறை கலாச்சாரத்தோடு வளர்ந்து இருக்கும் இந்தியாவில் என்பதை மறந்து விடாதீர்கள். அது வரை, உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றவர்களின் கடமையல்லவா? 

20 comments:

  1. யதார்த்த நிலையை சிறப்பாக எடுத்துரைத்துள்ள கட்டுரை. அழகு என்பதும், அழகாய் எடுத்துக் காட்டுவதும் எதற்காக, யாருக்காக என்பதை புரிந்து கொள்ளும் பக்குவம் வேண்டும். எது எப்படி இருக்க வேண்டுமோ, அது அப்படி இருந்தால் மட்டுமே சிறப்பு. எடுப்பாய் தோற்றம் அளிப்பது யார் முன்னே என்பதும், நம் மதிப்பு எதை வைத்து அளவிடப்படுகிறது என்பதையும் ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். அதை மீறும் போது, நிம்மதியை தொலைத்த நிலை தான் நீடிக்கும். இனிமேல் வருவதற்கு ஐந்து நிமிடங்கள் தாமதமானாலும் வீட்டில் உள்ளவர்களின் படபடப்பு அதிகமாகும்... வரும் முன் காப்பது அறிவுடைமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, வருகைக்கும், கருத்திற்கும்...

      Delete
  2. Replies
    1. நிச்சயமாக, தூக்குத் தண்டனையை விட கொடிய தண்டனையை சிந்தித்து அரசாங்கத்திற்கு தெரிவிப்போம்...

      Delete
  3. சிந்திக்க வேண்டிய விசயம். தண்டனை கடுமைப்படுத்தப் படுவது அவசியம். அப்போது தான் மற்றவர்களுக்கு இதை செய்யக்கூடாது என்ற எண்ணம் ஏற்படும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்..உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மனமார்ந்த நன்றி

      Delete
  4. Excellent article, With ur permission ill use it for my fb , thx

    ReplyDelete
    Replies
    1. நன்றி...

      தாராளமாய் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..நல்ல விஷயம் யார் மூலமாக சென்றால் என்ன?

      Delete
  5. மிகச் சிறப்பான யதார்த்தமான பதிவு....அதிலும் 13,14,15,16, பாராவில் எழுதியுள்ளது மிகவும் அருமை...பெற்றோர்கள் இதைக் கடைப்பிடித்தால் பாதியளவிற்கு பாலியல் பலாத்காரம் குறையும்...இதே கருத்தைத்தான் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மாநில முலமைச்சரும், நேற்று முன்தினம் தில்லி போலீஸ் கமிஷ்னரும் கூறினார்கள்.உடனே மகளிர் அமைப்புகள் வீறுகொண்டு எழுந்து போராடின....குற்றம் செய்வது எவ்வளவிற்கு தண்டனைக்கு உரியதோ அதே அளவிற்கு குற்றம் செய்ய்த்தூண்டுவதும் தண்டனைக்கு உரியதாகும்... தற்போது பெண்கள் அணியும் ஆடை மிகவும் மோசமாக,ஆபாசமாக பார்ப்பவர்களைக் குற்றம் செய்யத் தூண்டுவதாகவும் உள்ளது...அதற்கு பெண்கள் போராடவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நான் பெண் பிள்ளைகளை பெற்றவர்களை குறை சொல்லும் நோக்கத்தில் சொல்லவில்லை. சமுதாயத்தின் பார்வை அந்த அளவிற்கு கீழ்த்தரமாய் போய் விட்டது. அது தன பிள்ளைகளால் இருக்க கூடாது என்பதுதான் என் ஆதங்கம். நாம்தான் இந்த சுகங்களை அனுபவிக்கவில்லை. என் பிள்ளைகளாவது அனுபவிக்கட்டுமே என்று இன்றைய கால பெற்றவர்கள் நினைக்கின்றார்கள். நாம் சிறு பிள்ளைகளாக இருந்த போது இந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளரவில்லை..அதனால் பாலியல் வன்மங்கள் அதிக அளவில் இடம்பெறவில்லை. ஆனால் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாய் அமைந்து வருகின்றது என்றே நான் நம்புகின்றேன். குளிக்கும் போது படம் எடுப்பது...பெண்களின் அந்தரங்களை படம் பிடித்து இணையத்தில் வெளியிடுவது என்று சமுதாயம் கலாச்சார சீர்கேடுகளை நோக்கிச் செல்கின்றது என்றால் அது பொய்யில்லை.

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஏதோ ஆபாசமாய் திட்டி விட்டீர்கள் போலும், அதனாலேயே இந்த கருத்து தடை செய்யப்பட்டிருக்கின்றது. கருத்திற்கு நன்றி..

      Delete
  7. நண்பரே, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் உங்கள் பார்வை பிழையானது. ஆண்களின் பாலியல் வக்கிரங்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் பெண்களின் உடைக்கலாச்சாரத்தை காரணமாக்க முயற்சிக்காதீர்கள். தூத்துக்குடியில் பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கி கொல்லப்பட்ட பள்ளி மாணவி சீருடைதான் அணிந்திருந்தாள். அது ஒன்றும் நீங்கள் குற்றம்சாட்டுவதைப்போல அரைகுறை ஆடை இல்லை. கடந்தவாரம் ஒசூர் மூக்கண்டப்பள்ளியில் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த ஆறுவயதுக் குழந்தையை தூக்கிக்கொண்டுபோய் ஒருவன் வல்லாங்கு செய்திருக்கிறான். அந்தப்பக்கம் வந்த தீயணைப்புத்துறை ஊழியர்கள் பார்த்திருக்காவிட்டால் அந்தக்குழந்தையும் கொல்லப்பட்டிருக்கும். அந்த சிசு என்ன கவர்ச்சியைக் காட்டி அவனுக்கு தடுமாற்றத்தை உருவாக்கியிருக்க முடியும்? பெண்ணின் பிணத்தைக்கூட புணர்கிறவர்களைப்பற்றி செய்திகள் வருகின்றன. பிணம் எதை தூக்கிக்காட்டி அவர்களுக்கு அழைப்புவிட்டது? நாமக்கல் பக்கம் நான்குபேர் சேர்ந்து ஆடுகளை இழுத்துப்போய் புணர்ந்திருக்கிறார்கள். ஆடு ஆபாசமாக குறியைக் காட்டுவதால்தான் இப்படி பசங்க டெம்ப்ட் ஆகுறானுங்க என்று ஆட்டுக்கும் ஐம்பது கஜத்தில் புடவை வாங்கி சுற்றிவிடலாமா... வறுமையினால் உடலை மூடிக்கொள்ளக்கூட வழியற்று கிழிந்த உடை அணிந்திருப்பவர்களையெல்லாம் என்ன செய்யலாம்?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே....உங்கள் உணர்வுபூர்வமான கருத்திற்கு நன்றி. தூத்துக்குடி மாணவி சீருடைதான் அணிந்திருந்தாள். அதோடுதான் அந்த காமுகன் அவளை வல்லாங்கு செய்து கொன்றிருக்கின்றான். உண்மைதான்.. அவள் ஆடை விலகவில்லை...அவள் கவர்ச்சி காட்டவில்லை. ஆனால் அந்த காமுகன் ஏற்கனவே எங்கயோ இணையத்திலோ. அல்லது மற்ற இடங்களில் பெண்மையின் அந்தரங்கங்களை ரசித்திருக்கின்றான். அதே வெறியில்தான் இந்த பெண்ணையும் புனர்ந்திருக்கின்றான். நான் பெண்கள் அரைகுறை ஆடையில் வலம் வருவதால்தான் இந்த மாதிரியான நிகழ்வு நடக்கின்றது என்று ஒருபோதும் தெரிவிக்கவில்லை. தயவுசெய்து மீண்டும் ஒருமுறை படிக்கவும். அதுவும் ஒரு காரணம் என்றுதான் சொல்லி இருக்கின்றேன்.

      குற்றம் செய்வதற்கு இது தூண்டுகோலாய் அமைகின்றது என்றுதான் தெரிவுபடுத்தி இருக்கின்றேன்.. இருந்தாலும் உங்கள் மனதை எனது பதிவு புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன். அதுபோல பிஞ்சுவை ஒரு வெறி பிடித்த ஓநாய் வல்லாங்கு செய்வதைப் பற்றியும் தெரிவித்து இருந்தீர்கள். மிகவும் வேதனையான, கொடுமையான விசயம்தான் அது. அதையும் இங்கே தெளிவுபடுத்தி இருக்கின்றேன். பெரிய பெண்ணை நுகர பயந்து போய் எதிர்ப்பு தெரிவிக்காத பிஞ்சினை அனுபவிக்க முயற்சி செய்கின்றார்கள் .

      Delete
    2. உங்கள் கருத்து உண்மையானது...வீண் வாதம் செய்யாமல்...ஆண்களை மட்டுமே குற்றம் சொல்லாமல் பாலியல் வன்முறைகளத்தடுப்பது எப்படி என்று ஆராய வேண்டும்... இன்றைய சமுதாயத்திற்கு அதுதான் தேவை..

      Delete
  8. Replies
    1. உணர்விற்கும், புரிதலுக்கும் நன்றி..

      Delete
  9. //இதற்க்கு தூக்குதான் சிறந்த தண்டனை என்று ஒரு சிலர் பிதற்றிக் கொண்டிருக்கின்றார்கள். முட்டாள்தனமான முடிவு இது என்றே நான் நம்புகின்றேன்.//

    சரியாக சொன்னீர்கள் அண்ணா.. நான் கேள்வி பட்டிருக்கிறேன்,சரியா எந்த நாடுனு தெரியல.. May be Dubai.. அங்க திருடுனா கைய வெட்டிருவாஙக.. கற்பழிச்சா ஆண் குறிய வெட்டிருவாங்க.. இந்த தண்டனை இங்கயும் அமல் ஆச்சுனா ஓரளவு இந்த மாதிரி குற்றங்கள் குறையும்னு நெனைகேன்.. நீங்க என்ன நெனைக்குறீங்க னா????

    ReplyDelete
    Replies
    1. என்னை பொருத்தவரை கை, கால்களை வெட்டுவது சரி என்று தோன்றவில்லை. அந்த கால கிராம பஞ்சாயத்து மரத்தடி தீர்ப்புகள்தான் சரியென்று நம்புகின்றேன். இந்த பொண்ணை கற்பழிச்சதால இவன் கூட ஆரும் பழக கூடாது, தண்ணி கொடுக்க கூடாது, இவனை பார்த்து பேசுறவங்களுக்கும் இதே தண்டனைதான்..அப்படீன்னு நம்ம ஊரு நாட்டாமை சொல்வாரே அந்த மாதிரி தீர்ப்பு இருக்கணும்...அவனும் சமுதாயத்துல நடமாடனும், ஆனா அவன் நெத்தியிலே நான் காமக் கொடுரன்னு பச்சை குத்தி இருக்கணும்...என்ன நான் சொல்றது சரிதானே...

      Delete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...